Homeசெய்திகள்மலை ஆக்கிரமிப்பு-கோர்ட்டு உத்தரவு என்ன? யானை ராஜேந்திரன் தகவல்

மலை ஆக்கிரமிப்பு-கோர்ட்டு உத்தரவு என்ன? யானை ராஜேந்திரன் தகவல்

திருவண்ணாமலை மலை மீது 1535 வீடுகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கலெக்டருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது நீர் வழிப்பாதைகளை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக பட்டா இல்லாமல் பலர் வீடுகள் கட்டியுள்ளனர் என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும், மேலும் பல்வேறு தீர்த்த குளங்கள் அழிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாறி உள்ளது என்று யானை ராஜேந்திரன் சென்னை ஜகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் திருவண்ணாமலை மலையே சிவன்தான், அங்கு எப்படி கழிப்பிடங்களும், செப்டிக் டேங்க்குளும் கட்ட அனுமதிக்கலாம் என ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஜகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த குழு நான்கு முறை கூடி ஆலோசித்தது.

மலை ஆக்கிரமிப்பு-கோர்ட்டு உத்தரவு என்ன? யானை ராஜேந்திரன் தகவல்

இதற்கிடையில் திருவண்ணாமலை மலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 உயிரிழந்தனர். அந்த இடத்தை ஆய்வு செய்த ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன், நீதிமன்றத்திற்கு உயிர்கள் முக்கியம், வீடுகளுக்காக உயிர்களை பலி கொடுக்க முடியாது என கருத்து தெரிவித்திருந்தார். அபாயகரமான பகுதியில் 1535 வீடுகள் இருப்பதை அதிகாரிகள் குழு கணக்கெடுத்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் வீடுகள் அகற்றப்படுவதை எதிர்த்து சாலைமறியலில் ஈடுபட்டனர். ஓட்டு கேட்டு எங்கள் பகுதிக்கு யாரும் வரக்கூடாது என ஆவேசமாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அரசியல் கட்சிகள் அவர்களை தேடிச் சென்று சந்தித்தது. அந்த பகுதி மக்கள் சார்பாக கோர்ட்டில் முறையிட திமுக முயற்சி எடுத்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது. 1535 வீடுகள் அகற்றுவது குறித்து திருவண்ணாமலை கலெக்டர் எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து அறிக்கை அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இது குறித்து மலை மற்றும் குளம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வழக்கு தொடர்ந்திருந்த யானை ராஜேந்திரன் செய்தியாளரிடம் கூறியதாவது,

நீதிபதிகள் ஸ்ரீராம், சுந்தரசேகர் ஆகியோர் வழக்கை விசாரித்தனர். மலை மீது ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மாற்றப்பட்டது ஏன்? இப்போது உள்ள கலெக்டர், கோர்ட்டு அமைத்த குழு கூட்டத்தை நடத்தாதது ஏன்? 3 மாதமாக என்ன செய்து கொண்டிருந்தார்? என கேள்வி எழுப்பினர். ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தது குறித்து அபிடவிட் தாக்கல் செய்ய கலெக்டருக்கு உத்தரவிட்டனர். ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் கூட்டம் வருகிற 13-ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோர்ட்டு உத்தரவு குறித்து ஆலய வழிபடுவோர் சங்கத்தைச் சேர்ந்த பி.ஆர்.ரமேஷ் தெரிவித்திருப்பதாவது,

பத்து மாதங்களுக்கு முன்பு, கோயில் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், திருவண்ணாமலை மலை மற்றும் அங்குள்ள சுமார் 140 குளங்கள், கால்வாய்கள் மற்றும் பிற நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக முக்கியமான பொது நல வழக்குகளை தாக்கல் செய்தார்.

பின்னர், ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஒரு வழக்கறிஞர் ஆணையரை மாண்புமிகு டிவிஷன் பெஞ்ச் நியமித்தது. மலையில் (கோயில் மற்றும் வன நிலத்தில்) 1000க்கும் மேற்பட்ட சட்டவிரோத வீடுகள் இருப்பது குறித்து வழக்கறிஞர் ஆணையரின் அதிர்ச்சியூட்டும் அறிக்கையைப் பார்த்த பிறகு, நிலைமையை மேலும் மதிப்பிடுவதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை டிவிஷன் பெஞ்ச் நியமித்தது.

கலெக்டர் தர்ப்பகராஜ்

ஓய்வுபெற்ற நீதிபதிக்கு 2025 மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என்று உறுதியளித்த பின்னர், சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற நடவடிக்கை எடுத்து வந்த மாவட்ட ஆட்சியரை அரசு இடமாற்றம் செய்தது. இன்று வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசின் முழுமையான தோல்வியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பெஞ்ச் முன் கொண்டு வந்தார்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அரசாங்கத்திடமிருந்து நம்பகமான நடவடிக்கைகள் இல்லாததை 1வது அமர்வு கடுமையாகக் கண்டித்தது. இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த மாதம் 27 ஆம் தேதிக்குள் நீதிமன்றம் இறுதி உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


facebook

Link:-NEWS THIRUVANNAMALAI 

Join us for more Update

YouTube

@agnimurasu

error: Content is protected !!