புனரமைக்கப்பட்ட திருவண்ணாமலை ரயில் நிலைய துவக்க விழாவில் பாஜகவினரும், திமுகவினரும் மாறி மாறி கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று (22.05.2025) அமிர்த ரயில் நிலைய திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட திருவண்ணாமலை ரயில் நிலையத்தினை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, கலெக்டர் க.தர்ப்பகராஜ் கல்வெட்டினை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக சார்பில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், பாஜக சார்பில் வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, மாவட்டத் தலைவர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
என்னென்ன வசதி?
திருவண்ணாமலை தமிழ்நாட்டின் முக்கியமான யாத்திரை தலமாகும். திருவண்ணாமலை ரயில் நிலையமானது ரூ.8.27 கோடி மதிப்பீட்டில் நவீன முனையம், காத்திருப்பு அரங்குகள், புதிய தங்குமிடங்கள் மற்றும் டிஜிட்டல் மேம்பாடுகள் உள்ளிட்ட விரிவான மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. மூன்று நடைமேடைகளைக் கொண்ட இந்த ரயில் நிலையம் ஒரு நாளைக்கு சராசரியாக 8184 பயணிகளுக்கு சேவை செய்கிறது.
மேலும் பிரத்யேக பாதசாரி பாதையுடன் மேம்படுத்தப்பட்ட நிலைய அணுகுமுறை சாலை, வருகை மற்றும் புறப்படும் பகுதிகளுக்கான தாழ்வாரங்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட நிலைய கட்டிட முகப்பு, பிளாட்பார்ம் எண். 1ல் புதிய கழிப்பறை வசதி, செல்பி பாயிண்டுடன் கூடிய நிலப்பரப்பு பகுதிகள், புதுப்பிக்கப்பட்ட முன்பதிவு கவுன்டர்கள், பொது மற்றும் ஏசி காத்திருப்பு கூடங்கள், புதுப்பிக்கப்பட்ட ஓய்வு அறைகள், புதிய பார்சல் அலுவலகம் மற்றும் ஆடை அறைகள் உள்ளன.
பிளாட்பார்ம் எண். 1ல் கூடுதல் இருக்கைகள், தண்ணீர் அறைகள் மற்றும் 15-பே பிளாட்பார்ம் ஷெல்டர்களுடன் மேம்படுத்தப்பட்ட பிளாட்பார்ம் தரையமைப்பு, புதுப்பிக்கப்பட்ட நடைமேம்பாலம் தரை, மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ஏற்ற சரிவுகள், பிரத்யேக பார்க்கிங், அணுகக்கூடிய நீர் அறைகள் மற்றும் பலகைகள் உள்ளிட்ட அம்சங்கள், டிஜிட்டல் மும்மொழி நிலைய பெயர் பலகைகள் மற்றும் அறிவிப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட பயணிகள் தகவல் அமைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ளது.
இது திருவண்ணாமலைக்கு ஒரு புதிய அடையாளம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவ்வளவு செலவு செய்தும் பயணிகளின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா வசதி இல்லாதது குறித்து ரயில்வே நிலைய அதிகாரிகளிடம் கேட்ட போது விரைவில் அந்த வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சி துவக்க விழாவிற்கு வந்திருந்த அமைச்சர் எ.வ.வேலு மகன் கம்பன், எங்கு பார்த்தாலும் பாஜக கொடி இருப்பதை பார்த்து திமுகவினரை கடிந்து கொண்டார். இதையடுத்து அவசரம் அவசரமாக பாஜக கொடிக்கு நடுவில் திமுக கொடி நடப்பட்டது. நிகழ்ச்சியில் பாரத் மாதா கி ஜே, பிரதமர் மோடி வாழ்க என பாஜகவினர் கோஷம் எழுப்ப, பதிலுக்கு திமுகவினர் முதல்வர் ஸ்டாலின் வாழ்க, அமைச்சர் வேலு வாழ்க என கோஷம் எழுப்பினர்.
வீடியோ…
புதுபொலிவு பெற்ற திருவண்ணாமலை ரயில் நிலையத்தின் கழுகு பார்வை காட்சிகள்