திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யும் பொருட்டு பிரேக் தரிசன முறை அமல்படுத்தப்படும் எனவும், இதற்கு ஆட்சேபனை இருந்தால் நேரிலோ, கடிதம் மூலமாகவோ தெரிவிக்கலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையையே சிவனாக நினைத்து கிரிவலம் வருகின்றனர். இது மட்டுமன்றி தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். விடுமுறை தினத்தில் மினி பவுர்ணமி போல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
விடுமுறை தினத்தில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக பக்தர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் சாதாரண நாளிலும் 4 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு குறுக்கு வழியில் விஜபிக்கள் அழைத்துச் செல்லப்பட்டதே காரணம் என சொல்லப்படுகிறது. வசதி படைத்தவர்களுக்குத்தான் இந்த கோயில் என பக்தர்கள் புலம்பும் நிலையும் ஏற்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் காத்திருந்தால் பக்தர்கள் கடும் சிரமம் அடைந்தனர். பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் வரிசையில் நிற்பவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமலும், குடிதண்ணீர் இன்றியும் அல்லல்படும் நிலை ஏற்பட்டது.
வீடியோ:-
இது மட்டுமன்றி பக்தர்களிடேயே மோதலும் நிகழ்ந்து வருகிறது. நேற்று ஆந்திரா மாநில பக்தர்களும், தமிழக பக்தர்களும் அடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரசாதம் வாங்கும் இடத்தில் இது நடைபெற்ற நிலையில் அம்மணி அம்மன் கோபுரம் அருகில் கோயில் பணியாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. இரு சம்பவங்களிலும் போலீசார் தலையிட்டு மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
ஒவ்வொரு பவுர்ணமியிலும் 3 கோடி ரூபாய்க்கு மேல் காணிக்கை வரும் நிலையில் கோயில் நிர்வாகம், பக்தர்களுக்கு விரைவு தரிசன வசதியையும், அடிப்படை வசதியையும் செய்வதை விட்டு விட்டு வருமானத்தை கருத்தில் கொண்டு கடைகள் கட்டுவதில் கவனம் செலுத்தியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி போன்று திருவண்ணாமலையிலும் பிரேக் தரிசன முறையை கொண்டு வர வேண்டும் என்று ஆன்மீகவாதிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். சென்ற வருடம் திருவண்ணாமலைக்கு வந்திருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பிரேக் தரிசன முறை அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்வதற்காக தினமும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை 300 ரூபாய் கட்டணத்தில் இடை நிறுத்த தரிசனம் (பிரேக் தர்ஷன்) அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், 300 ரூபாய் கட்டண தரிசனத்துக்கு செல்லும் பக்தர்களுக்கு தேங்காய், பழம், விபூதி குங்கும பிரசாதம், வில்வம் மற்றும் சுவாமி அம்பாள் படம் ஆகியவை ஒரு மஞ்சள் பையில் வைத்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் சிலருடைய பிரஷர் காரணமாக இத்திட்டம் அறிவிப்போடு நின்று விட்டது. இந்நிலையில் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது,
சட்டமன்றத்தில் 2023-2024-ம் ஆண்டு அறிவிப்பு எண் 85-ல் பக்தர்கள் பெருமளவில் வருகை புரியும் திருக்கோயில்களில் தினசரி ஒரு மணி நேரம் இடை நிறுத்த தரிசன வசதி (Break Dharsan) ஏற்படுத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேற்படி சட்டமன்ற அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்வதற்கு, தினசரி மாலை 3 முதல் 4 வரை கீழ்கண்ட விவரப்படியான திருவிழா மற்றும் விசேச நாட்கள் தவிர்த்து, பக்தர் 1-க்கு ரூ.500 கட்டணச் சீட்டில் இடை நிறுத்த தரிசனம் (Break Dharsan) அறிமுகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
விசேஷ நாட்கள்
1. ஆனி பிரமோற்சவம் 10 நாட்கள்
2. ஆடி பூரம் உற்சவம் 10 நாட்கள்
3. திருக்கார்த்திகை தீப திருவிழா 17 நாட்கள்
4. உத்தராயண புண்ணியகால உற்சவம் 13 நாட்கள்
5. பங்குனி உத்திரம் 5 நாட்கள்
திருவிழா நாட்கள் 55 நாட்கள்
6. பௌர்ணமி நாட்கள் (ஒரு வருடத்திற்கு) 24 நாட்கள்
7. பிரதோஷ நாட்கள் (ஒரு வருடத்திற்கு) 24 நாட்கள்
மொத்தம் – 103 நாட்கள்
இடைநிறுத்த தரிசனம் குறித்து ஆட்சேபனை, ஆலோசனை இருப்பின்
30.06.2025-ம் தேதிக்குள் எழுத்து பூர்வமாக இணை ஆணையர்/செயல்
அலுவலர், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை என்ற
முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
30.06.2025 தேதிக்கு பின்னர் பெறப்படும் ஆட்சேபனை / ஆலோசனை ஏற்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் முகவரி:- [email protected]
கருத்துக்களை அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்,
திருவண்ணாமலை-606 601.
இவ்வாறு கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த முறை பிரேக் தரிசன டிக்கெட் 300 ரூபாய் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இது 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் வாங்குபவர்களுக்கு என்னென்ன பிரசாதம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
Link:- http://www.youtube.com/@AgniMurasu