கூட்டுறவு உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர்வதற்கான வாய்ப்பை உருவாக்கிடும் பயிற்சியை பெற விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் என்ற பயிற்சி வருகின்ற ஏப்ரல் மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்ச்சிக்கான விண்ணப்பங்கள் வரும் மார்ச் 24-ம் தேதி முதல் அடுத்த மாதம் ஏப்ரல் 13-ம் தேதி வரை திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும்.
திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களுமான பயிற்சி வார நாட்கள் பயிற்சியாக 17 நாட்களும் வார இறுதி நாட்களான சனி மற்றம் ஞாயிற்றுகிழமை பயிற்சியாக 17 நாட்களும் அளிக்கப்பட உள்ளது. பயிற்சி காலம் 2 மாதம் ஆகும்.
பயிற்சிக்கான கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.4550 செலுத்த வேண்டும். பயிற்சியில் நகையின் தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படுகிறது. 40 மணி நேர வகுப்பறை பயிற்சியும், 60 மணி நேர செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சி முடித்து சான்று பெற்றவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துக்கொள்ளலாம்.
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி ஒரு வேலை வாய்ப்பை அளிக்ககூடிய பயிற்சி ஆகும். இப்பயிற்சிக்கு வயது வரம்பு இன்றி அனைவரும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச வயது 15 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
இப்பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர வாய்ப்பு உள்ளது.
மேற்கண்ட பயிற்சியில் சேருபவர்கள் திருவண்ணாமலையில் திண்டிவனம் ரோடு நாவக்கரையில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.