Homeஆன்மீகம்துலாம்¸விருச்சகம்¸தனுசு ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

துலாம்¸விருச்சகம்¸தனுசு ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

யந்திர வித்தகர் கே.வி.ரெகுநாதன் அலசி ஆராய்ந்து கணித்துள்ள துலாம்¸ விருச்சகம்¸ தனுசு ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

13-11-2021 சனிக்கிழமை மாலை 6-21 மணி அளவில் ஸ்ரீகுருபகவான் மகர ராசியிலிருந்து¸ கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆனார். அதன்பிறகு 2022 ஏப்ரல் மாதம் மீன ராசிக்கு செல்கிறார். கும்ப ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம் வரை ஒவ்வொரு ராசிக்கும் ஏற்பட போகும் பலன்களை திருவண்ணாமலை பெரியத் தெருவில் வாமனா யந்திர சாலை மற்றும் வாமனா வாஸ்து¸ ஜோதிட ஆராய்ச்சி மையம் வைத்துள்ள பரிகார செம்மல்¸ யந்திர வித்தகர் என்றழைக்கப்படும் கே.வி.ரெகுநாதன் தனது அனுபவத்தை கொண்டு துல்லியமாக கணித்துள்ளார். 

மேஷம்¸ ரிஷபம்¸ மிதுனம் ராசிகளுக்கான பலன்களை பார்க்க...https://www.agnimurasu.com/2021/11/blog-post_15.html

கடகம்¸ சிம்மம்¸ கன்னி ராசிகளுக்கான பலன்களை பார்க்க…
இன்றைக்கு துலாம்¸விருச்சகம்¸தனுசு ராசிகளுக்கான பலன்களை பார்ப்போம்.

“சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல்’ எனும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க துலாக் கோல் போல் நீதி நேர்மை கடைப்பிடிக்கும் துலாம் ராசி நேயர்களே! வாக்கு தவறாத கடமை¸ கண்ணியம்¸ கட்டுப்பாடுடைய¸ பிறரும் அது போல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய¸ உள் ஒன்று வைத்து புறம் பேசாத¸ வசீகரம் உடைய¸ கலை ஆர்வம் மிக்க¸ தர்ம சிந்தனை உடைய¸ பெண்கள் தொடர்பு அதிகம் உடைய துலா ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 4ல் சஞ்சரித்த குருபகவான் வரும் 13-11-2021 முதல் 5ம்மிடம் பெயர்ந்து¸ அங்கிருந்து அவர் 9¸11¸1 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 4ல் அமர்ந்து 6¸10¸1 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு கேதுக்கள் 8.2ல் அமர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை வழங்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உடல் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குரு¸ சனி ஆகிய இருவரின் பார்வை ஒருங்கே விழுகின்றது. வளர்பிறை 15 நாட்கள்¸ தேய்பிறை 15 நாட்கள் என்று உங்கள் உடல்நலம் இருக்கும். காலையில் எழும்போது தன்னம்பிக்கையுடன் எழுந்து¸ மதியத்திற்கு பிறகு சோர்வாய் அமர்ந்து விடுவீர்கள். ஏற்கனவே உங்களுக்கு அர்த்தாஷ்டமத்து சனி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குருப்பெயர்ச்சி ஒன்றே உங்களது உடல்நிலை தெளிவு தர வந்து கொண்டிருக்கிறது. மனம்¸ எண்ணம் இந்த இரண்டையும் தெளிவாக வைத்துக் கொண்டால் அனைத்தும் சுபமாக நடக்கும்.

தனம்¸ வாக்கு¸ குடும்பம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் கேதுபகவான் அமர்ந்துள்ளார். இது தற்காலிக நாகதோஷம் ஆகும். தனஸ்தானத்தை பொருத்தவரை ஒருவிதமான மந்தநிலை காணப்பட்டாலும் குருவின் அருளால் ஏதோ ஒருவர் நமக்காக மந்தநிலையை சரிசெய்ய வருவார். இதனால் பொருளாதாரத்தில் பெரிய மந்தநிலை எதுவும் இருக்காது. உங்களது குடும்பத்தில் நிச்சயம் கேதுபகவான் பாதிப்பை ஏற்படுத்துவார். இது தீர அருகில் உள்ள நாகதெய்வங்களுக்கு விளக்கு ஏற்றி வரவும். அதையும் செவ்வாய்¸ வெள்ளி¸ ராகுகாலத்தில் செய்யவும். வாக்குஸ்தானம் பலவீனமாக உள்ளது. முன் ஜாமீன் யாருக்கும் தரவேண்டாம்.

தைரியம்¸ சகோதரம் :- உங்களின் இந்த ஸ்தானம் ஓரளவு நன்றாக உள்ளது.உடல் வலிமை இல்லாவிட்டாலும் மனவலிமை அதிகமாகும் காலமாகும். எந்தக்காரியத்தையும் விடாப்பிடியாக செய்து பழக்கப்பட்ட நீங்கள் இக்காலத்தில் கொஞ்சம் சமயோஜித புத்தியுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் நாம் செய்யும் காரியங்களில் வெற்றிபெற முடியும். உங்கள் சகோதர சகோதரி வர்க்கம் சில சஞ்சலங்களுடன் காணப்படும். ஒரு சிலர் உங்கள் மேல் தேவையில்லாத வெறுப்பை உமிழ்வார்கள். சற்று நிதானமுடன் கையாள வேண்டும். இல்லையெனில் நீங்கள்தான் பலி ஆடாக ஆவீர்கள் என்பதில் ஐயமில்லை.

தாய்¸ வீடு¸ மனை¸ வாகனம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்து அர்த்தாஷ்டமத்து சனியாக வலம்வருகிறார். ஆகவே உங்களது சுகஸ்தானமாகிய இந்த ஸ்தானம் பலவீனப்பட்டுள்ளது. தாயின் ஆயுளுக்கு பங்கமில்லை என்றாலும் உடலில் பலவிதமான கோளாறுகள் தோன்றக்கூடும். சரியான மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். தாய்-மக்கள் உறவுமுறை சரிவர இருக்காது. உங்களது வீடு¸ மனை அமைப்பில் பெரிய தாக்கங்கள் ஏதும் இருக்காது. இருப்பதை அப்படியே தக்கவைத்துக் கொள்வது நலம் தரும். உங்களது வண்டி வாகனயோகம் சுமாராக உள்ளது. காலம் வரும்வரை காத்திருப்போம்.

பூர்வ புண்ணியம்¸ புத்திர ஸ்தானம் :- உங்களது இந்த ஸ்தானத்தில் குருபகவான் அமர உள்ளார். மிகவும் நல்ல காலம் ஆகும். கடந்த 2 வருடங்களுக்கு பிறகு குருபகவான் உங்களுக்கு பரிபூரண பலன்களை அளிக்க வந்துள்ளார். உங்களது பூர்வ புண்ணிய பலம் சிறந்து விளங்கி பாவபலன்கள் குறைவாகும். குலதெய்வ வழிபாடு செய்து குலம் விளங்க அருள் தரும். புத்திர பாக்யத்தை பொருத்தவரை குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திரபாக்யம் கிட்டும் காலம் ஆகும். ஜெனன ஜாதகத்தில் புத்திரதோஷம் உள்ளவர்கள் தக்க பரிஹாரங்களை செய்து கொள்ளவும். உங்கள் குழந்தைகளின் ஆயுள்¸ உடல்¸ கல்விநிலை சிறப்பானதாக இருக்கும். நல்லதே நடக்கும்.

கடன்கள்¸ உடல் உபாதைகள் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவானின் 3ம் பார்வை விழுகின்றது. சனிபார்வை என்பது அவ்விடத்தை கெடுத்துவிடும். ஆக உங்களுக்கு கடனைக் கெடுக்கும். உடம்பையும் கெடுக்கும். உங்களது கடன் அமைப்பை பொருத்தவரை அது நிர்மூலம் ஆவதற்கு வாய்ப்பு உண்டு. இருந்தாலும் சில கடன்கள் பைசல் ஆவதில் சிக்கல்களும் உண்டு. தகுந்த உபாயங்களை சீர்தூக்கி பார்க்கவும். உங்கள் உடம்பில் சூடு¸ மறைவிட உறுப்புக்களில் தொந்தரவு¸ கண் எரிச்சல் போன்றவை தோன்றக்கூடும். போதிய மருத்துவ சிகிச்சை தேவை. ஸ்படிகமணி மாலை அணிந்துகொண்டு சூடு சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து விடுபடுங்கள்.

திருமணம்¸ கணவன்-மனைவி :- உங்களின் இந்த ஸ்தானம் வலுவடைய உள்ளது. கடந்த 2 வருடங்களாக உங்களுக்கு போதிய குருபலம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது குருபலம் வந்துள்ளது. திருமணத்திற்கு தயாராக இருப்பவர்கள் தகுந்த துணையை இக்கணம் அமைக்கலாம். ஜெனன ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் தக்க பரிஹாரங்களை செய்து கொள்ளவும். திருமணம் ஆன தம்பதியருக்கு இடையில் இருந்து வந்த உட்பூசல்கள் அனைத்தும் நீங்கும் காலம் ஆகும். ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டும் சூழ்நிலை உண்டு. தம்பதிகள் அனைவரும் திருமண கோலத்தில் உள்ள ஸ்ரீநாராயணரை வழிபட்டுவர நலம் உண்டாகும். 

ஆயுள்¸ மாங்கல்யம்¸ சத்ரு :- உங்களின் இந்த ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். இது தற்காலிக நாகதோஷம் ஆகும். உங்கள் ஆயுளுக்கு எவ்விதத்திலும் பங்கம் ஏற்படாது. உடல்நிலையில் கண்¸ மறைமுக உறுப்புகள் போன்றவற்றில் ஏதாவது நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்களது மாங்கல்ய ஸ்தானத்திற்கு ராகுவால் தடை ஏற்பட்டுள்ளது. அதை நிவர்த்தி செய்ய ராகு-கேது வழிபாடு செய்து வந்தால் நிவர்த்தி ஆகிவிடும். உங்கள் சத்ரு ஸ்தானம் வலுவிழந்து உள்ளது. இருந்த போதிலும் நீங்கள் வெளியிடும் வாய் வார்த்தைகளால் விரோதம் ஏற்பட வாய்ப்புண்டு¸

தந்தை¸ கல்வியோகம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவானின் 5ம் பார்வை கிடைத்துள்ளது. தந்தையின் ஆயுள்பாவம் தீர்க்கம் பெறும். தந்தையின் உடல் நிலையில் இருந்து வரும் நோய்கள் ஒவ்வொன்றாக விடைகொடுக்க ஆரம்பிக்கும். தந்தை-மக்கள் உறவுமுறை மேம்படும் காலமாகும். தந்தை சார்ந்த சொத்துக்கள் சரியான வகையில் பிரித்து கொடுக்கப்படும். உங்களது கல்விஸ்தானம் மேம்பட்ட நிலையில் இருப்பதால் விருப்பப்பட்ட பாடப்பிரிவு கிடைக்கும். அதே சமயம் பாடப்பிரிவை எடுப்பதில் முன்யோசனை தேவை. பாதியில் படிப்பை விட்டவர்கள் மேற்கொண்டு தொடர வாய்ப்பு உண்டு.

தொழில் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். ஆகவே விவசாயத் தொழிலில் உள்ளவர்களுக்கு சுமாரான விளைச்சலும்¸ மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கு மந்தமான சூழ்நிலையும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையில் உள்ளவர்களுக்கு இறுக்கம் அதிகமாதலும்¸ சுயதொழில் புரிவோருக்கு சுணக்கம் நீங்குதலும்¸ கலைத்துறையில் உள்ளவர்களுக்கு காலம் கைகொடுப்பதும்¸ அரசு¸ தனியார் துறையில் உள்ளவர்- களுக்கு கஷ்டமான ஜீவிதமும்¸ வேலையில்லாதவர்களுக்கு விரயத்தின் பேரில் வேலையும் கிடைக்கும்.

லாபம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 7ம் பார்வையை செலுத்துகிறார். ஆகவே எவ்வளவுதான் நமக்கு கெடுவினைகளை கிரகங்கள் தந்தாலும் குருவின் பார்வை நமக்கு திருவினையை அதாவது திருவருளை நிச்சயமாக தரும் என்பதில் ஐயமில்லை. அதே சமயம் நீங்கள் உங்களை பொருளாதாரத்தில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆடம்பரம்¸ வீண் பிடிவாதம்¸ பகட்டு போன்ற செயல்களில் உங்களது தனவரவை நீங்கள் இழக்க நேரிடும். தனக்கு போக தான தருமம் என்று கொஞ்சம் நம் வாழ்க்கைக்காக எடுத்து வைத்தபின் தாராளமாக செலவு செய்யுங்கள். வறட்டு கௌரவம் வேண்டாம். 

வாழ்க்கை செல்லும் பாதை :- உங்களின் இந்த இடம் குருபகவான் ஒருவர் மூலமே சிறப்பு பெற உள்ளது. உங்கள் இராசி அதிபதி சுக்கிரன். அவருக்கு குருபகவான் சத்ரு என்றாலும் தான் செய்யக்கூடிய பலன்களை சுப பலன்களாகவே செய்வார். அவர் 5ல் அமர்ந்து 9¸11¸1 ஆகிய இடங்களை பார்வையிடுவது அர்த்தாஷ்டமத்து சனியின் தாக்கத்தை குறைத்துவிட முடியும். சனி¸ இராகு¸ கேது இவர்களின் சஞ்சாரம் 2023 வரை சரியில்லை. ஆகவே நீங்கள் தகுந்த புண்ணிய பலன்களை கூட்டிக் கொள்ள வேண்டும். உங்கள் இராசி அதிபதி சுக்கிரன் அதிதேவதை மகாலட்சுமியை வழிபட்டு வாழ்க்கையில் வளம் பெறலாம்.

பரிஹாரம் :- திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரிக்குப்பத்தில் உள்ள சனிபகவானுக்கு ப்ரீதி செய்வதும்¸ திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ திருநாகேஸ்வரம்¸ கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள இராகு-கேதுக்களுக்கு பரிஹாரம் செய்வதும்¸ அனாதை குழந்தைகளுக்கு உணவு தானம் செய்வதும்¸ நூல்களில் மகாலட்சுமி கவசம் பாராயணம் செய்வதும்¸ நாங்கள் 28-11-2021ல் ஏற்பாடு செய்துள்ள மகாநவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச்சிறந்த பரிஹாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 5¸6. அதிர்ஷ்ட ராசிக்கல் : வைரம். அதிர்ஷ்ட நிறம் : வெண்மை¸ வெளிர் நிறம். பரிகார யந்திரங்கள் : துலாம் ராசி யந்திரம். ஸ்ரீமகாலட்சுமி யந்திரம். 

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். அந்தக் குமரனையே ராசி அதிதேவதையாக கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! திடகாத்திரமான தேக அமைப்பும்¸ வசீகரமான முகமும்¸ பிடிவாதம்¸ முன்கோபம்¸ முரட்டு சுபாவம் உடைய¸ மன உறுதிமிக்க¸ வாக்கில் நாணயம் மிகுந்த¸ சண்டை என்று வந்துவிட்டால் எதிரியை ஒரு வழி பண்ணக் கூடிய¸ உழைத்து செல்வம் சேர்ப்பதில் நிம்மதி உடைய விருச்சிக ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 3ல் சஞ்சரித்த குருபகவான் வரும் 13-11-2021 முதல் 4ம்மிடம் பெயர்ந்து¸ அங்கிருந்து அவர் 8¸10¸12 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 3ல் அமர்ந்து 5¸9¸12 ஆகிய இடங்களை பார்வையிடுகின்றார். இராகு¸ கேதுக்கள் 7¸1ல் அமர்ந்து தத்தம் இடங்களை பார்வையிடுகின்றனர். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் இராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை தரும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உடல் :- உங்களின் இந்த ஸ்தானம் கேதுவின் பிடியில் உள்ளது. மேலும் தற்போது அர்த்தாஷ்டமத்து குருவாக உங்களுக்கு குருபகவான் பலன்தர உள்ளார். கடந்த ஒரு வருட காலமாகவே உங்களுக்கு குருபகவான் எதுவும் சுப பலன்களை வழங்கவில்லை. இவ்வருடமும் அதே சூழ்நிலைதான் நீடிக்கும். உடல் ஸ்தானம் சற்று பலவீனப்படும். மனம் அமைதியாக இருக்காது.  எதையாவது நினைத்துக்கொண்டே வாழ்க்கையை நகர்த்துவீர்கள். ஏன் இல்லாத ஒன்றை கற்பனை செய்து பார்க்க வேண்டும். கற்பனையே உங்கள் உடல் நலத்தை கெடுக்கும். ஆகவே நீங்கள் நிஜத்திற்கு வாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

தனம்¸ குடும்பம்¸ வாக்கு :- உங்களின் இந்த ஸ்தானம் பலவீனம் அடைந்துள்ளது. ஆகவே தனவரவில் சற்று தடை தாமதங்கள் உருவாகும் சூழ்நிலை உண்டு. நிறைய உழைத்தும் அதற்கு தகுந்த பலன்களை அறுவடை செய்ய இயலாது. ஒரு சிலருக்கு பொருளாதார மந்த நிலை உருவாகும். உங்களது குடும்பத்தில் சிற்சில விரயங்கள் ஏற்படும் சூழ்நிலை உண்டு. இதன் பொருட்டு சில சச்சரவுகள் தோன்றும். ஆகவே நிதானமாக பேசி ஏதாவது ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஏனெனில் உங்கள் வாக்கு ஸ்தானம் மிகவும் மந்தமான சூழ்நிலையில் உள்ளது. பேச்சுக்களினால் விரோதம் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

தைரியம்¸ சகோதரம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்துள்ளார். இந்த அமைப்பே உங்களை இவ்வருடம் நிலை நிறுத்த உள்ளது. உங்களது தைரியம் என்பது மிக அதிகமாக இருக்கும். என்னதான் நமக்கு பலவழிகளில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் நமது மன தைரியத்தால் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். உங்களது சகோதர சகோதரி ஸ்தானம் அருமையாக உள்ளது. நீங்கள் அவர்களுடன் இணக்கமாக செல்ல வேண்டும். சொந்த பந்தங்களின் சுப¸ அசுப காரியங்கள் உங்களின் நன்மைக்கு ஏதோ ஒரு விதத்தில் வித்திடும். எந்தளவுக்கு நீங்கள் வாய் வார்த்தைகளில் ஜாக்கிரதையாக இருக்கிறீர்களோ அந்தளவுக்கு நல்லது. 

தாய்¸ வீடு¸ மனை¸ வாகனம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்துள்ளார். இது அர்த்தாஷ்டமத்து குரு ஆகும். தாயின் உடல்நிலையில் எச்சரிக்கை தேவை. உயிருக்கு பயமில்லை. தாய்-மக்கள் உறவுமுறை சீர்பெறாது. தாயை அரவணைத்து செல்ல தயாராகுங்கள். உங்களது வீடு¸ மனையை பொருத்தவரை ஏதோ கண்ணைக்கட்டி காட்டில் விட்டது  போல் இருக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம்¸ வீடு மாற்றம் உண்டாகும். ஒரு சிலர் சொந்த வீட்டிலிருந்து வாடகை வீடு செல்லும் நிலை ஏற்படலாம். உங்களின் வண்டி வாகனம் ஸ்தானம் நிலையில்லாத அமைப்பாக உள்ளது. புதிய வாகனம் வாங்குவதற்கு இது தகுந்த காலமல்ல. 

பூர்வ புண்ணியம்¸ புத்திர ஸ்தானம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் பார்வை விழுந்துள்ளது. ஆகவே மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் ஆகும். உங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். அப்போதுதான் புண்ணிய பலம் பெருகி¸ பாவ பலம் குறைவாகும். கிரகங்களின் கெடுபலனும் குறையும். உங்கள் புத்திரபாக்யம் சனியின் பார்வையால் சற்று தடை ஏற்படும். ஜெனன ஜாதகத்தில் புத்திரதோஷம் இருந்தால் பரிஹாரம் செய்து கொள்ளவும். வியாழக்கிழமைகளில் புத்திரகாரகன் குருபகவான் வழிபாடு புத்திர பாக்யத்தை ஏற்படுத்தும். உங்கள் குழந்தைகளில் கல்வி¸ உடல்நிலை சுமாராக உள்ளது. கவனம் தேவை.

கடன்கள்¸ உடல் உபாதைகள் :- உங்களது இந்த ஸ்தானம் மிகவும் பலமுள்ளதாக உள்ளது. ஆகவே உங்கள் கடன் ஸ்தானமும் பலமுள்ளதாக ஆகும். கடந்த சில வருடங்களாக நாம் உழைத்து கஷ்டப்பட்டு சேர்த்த பணத்திற்கு இப்போது சோதனை வந்துவிட்டது. எதன் மூலம் நம் சேமிப்பு கரைகிறது என்று நமக்கே தெரியாது. ஒரு சிலருக்கு வாழ்க்கைத்தேவையின் பொருட்டு கடன் வாங்கும் சூழ்நிலை உண்டு. உங்கள் உடம்பை பொருத்தவரை வயிறு¸ இரத்தம்¸ சதை¸ எலும்பு¸ சம்பந்தப்பட்ட நோய்கள் உருவாக வாய்ப்புண்டு. தக்க மருத்துவ ஆலோசனைகளை உரிய நேரத்தில் எடுக்கவும். நாட்களை தள்ளிப்போட வேண்டாம்.

திருமணம்¸ கணவன்-மனைவி:- உங்களின் இந்த ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். இது தற்காலிக நாகதோஷம் எனப்படும். உங்களுக்கு இப்போது குருபலமும் இல்லை. ஆகவே திருமணத்திற்கு தயாராக இருப்பவர்கள் சற்று பொறுத்திருக்க வேண்டும். ஜெனன ஜாதகத்தில் திருமண தோஷம் உள்ளவர்கள் பரிஹாரம் செய்து தயாராக இருக்கவும். மீனம் இராசிக்கு குருபெயர்ச்சி ஆனவுடன் திருமணம் செய்து கொள்ளலாம். திருமணம் ஆன தம்பதியருக்கு மத்தியில் சில உரசல்கள் ஏற்படும். இவ்வமைப்பு ராகு¸ கேதுவால் ஏற்படக்கூடியது. இது வரும் மார்ச் மாதம் வரையே. அதன்பின் கணவன்-மனைவி இருவரும் இணக்கமாக இருப்பார்கள்.

ஆயுள்¸ மாங்கல்யம்¸ சத்ரு :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 5ம் பார்வையை பதிக்கிறார். ஆகவே ஆயுள் பலம் தீர்க்கம் பெறும். அதே சமயத்தில் உடல்நிலையில் சற்று முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நரம்பு¸ ஜூரம் சம்பந்தப்பட்ட நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் தக்க மருத்துவ ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளவும். உங்களது மாங்கல்யம் பலம் பெற்று உள்ளது. எவ்வளவு தான் உங்களுக்குள் சச்சரவுகள் ஏற்பட்டாலும் மாங்கல்யம் பலம் பெற்று உள்ளதால் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. மற்றும் உங்கள் உற்றார்¸ உறவினர்¸ மாமன் வகையினர் ஏதாவது ஒருவகையில் இடைஞ்சல் செய்வார்கள் என்பதால் கவனம் தேவை.

தந்தை¸ கல்வியோகம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் தனது 7ம் பார்வையை செலுத்துகிறார். ஆகவே தந்தையின் உடல்நிலையில் மிகுந்த எச்சரிக்கை தேவை. நீர்¸ மனம்¸ புத்தி போன்றவற்றால் இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தந்தை-மக்கள் உறவுமுறை பாதிப்பு ஏற்படும். அவர் சொன்னபடி நீங்களோ¸ நீங்கள் சொன்னபடி அவரோ கேட்க மாட்டீர்கள். கவனம் தேவை. அரவணைத்து செல்ல வேண்டும். உங்கள் கல்வியோகம் தடைபட்ட அமைப்பில் உள்ளது. உங்களில் வெகு சிலருக்கு கல்வியை தொடர வாய்ப்புள்ளது. மற்றவர்கள் ஏதாவது தொழில் செய்யலாமா என்று மனம் போனபடி யோசித்து கொண்டிருப்பர்.

தொழில் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். ஆகவே விவசாயத்தொழில் சார்ந்தவர்களுக்கு விளைச்சல் நன்றாகவும்¸ மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு மந்தமான சூழ்நிலையும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இடமாற்றம் ஏற்படுதலும்¸ சுயதொழில் புரிவோர் வேறு தொழிலில் முதலீடு செய்தலும்¸ கலைத்துறையில் உள்ளவர்களுக்கு காலம் கைவிடுவதும்¸ அரசு¸ தனியார் துறையில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகளின் தொந்தரவும்¸ வேலையில்லாதவர்களுக்கு விருப்பமில்லா வேலையும் கிடைக்கும். 

லாபம் :- உங்களின் இந்த ஸ்தானமானது சனிபகவான் அருளால் மட்டுமே உன்னதமடைகிறது. லாபம் என்பது பணத்தால் மட்டுமே வருவது கிடையாது. குடும்பத்தில் நிம்மதி என்பதும் லாபமே. உங்கள் இராசிக்கு 2023 வரை சனிபகவான் 3ல் அமர்ந்து உங்களுக்கு தேவையானதை வழங்க உள்ளார். அவரின் பார்வை சற்று கடுமையானதாக இருப்பினும் குருவின் பார்வை¸ பராக்கிரமம்¸ தொழில்¸ நிம்மதி ஸ்தானங்களுக்கு விழுவது உங்கள் வாழ்க்கையில் சில சந்தோஷங்களை நிச்சயம் கொடுக்கும். மேலும் உங்கள் அருகில் உள்ள ஆலயங்களில் நாகதேவதை வழிபாடுகளை செவ்வனே செய்து வந்தால் நல்லது நடக்கும்.

வாழ்க்கை செல்லும் பாதை :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குரு¸ சனி ஆகிய இருவரின் பார்வை விழுந்துள்ளது. ஆகவே இந்த குருப்பெயர்ச்சியில் இன்பமும்¸ துன்பமும் கலந்தே காணப்படும். 4ல் குரு¸ 1¸7ல் கேது¸ ராகு என முக்கியமான இடங்களில் கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லை. ஆகவே சனி ஒருவனே உங்களுக்கு ஆதரவு. மேலும் வாழ்க்கையில் ஏற்படும் சஞ்சலங்கள் என்பது மாறிமாறி வரும். நிலையானது அல்ல. பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழிக்கேற்ப அடுத்த குருப்பெயர்ச்சி வரும் வரை காத்திருக்க வேண்டும். உங்கள் இராசி அதிபதி செவ்வாய் அதிதேவதை முருகரை வழிபட்டுவர அனைத்தும் சுபமாகும்.

பரிஹாரம் :- திட்டை¸ பட்டமங்கலம்¸ ஆலங்குடியில் உள்ள குருபகவானுக்கு வழிபாடு செய்வதும்¸ திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ திருநாகேஸ்வரம்¸ கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள ராகு¸ கேதுவுக்கு பரிஹாரம் செய்வதும்¸ முதியோர்களுக்கு படுக்கை விரிப்பு வழங்குவதும்¸ நூல்களில் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்வதும்¸ நாங்கள் 28-11-2021ல் ஏற்பாடு செய்துள்ள மகா நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச்சிறந்த பரிஹாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 1¸9¸2¸3.அதிர்ஷ்ட ராசிக்கல் : பவளம். அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு¸ இளஞ்சிவப்பு¸ ரோஸ்¸ வெண்மை கலந்த நிறங்கள்.

பரிகார யந்திரங்கள் : விருச்சக ராசி யந்திரம்¸ ஸ்ரீபாலசுப்பிரமணியர் யந்திரம். ராகு

உயர்ந்த நெற்றி¸ ஆழ்ந்த சிந்தனை¸ கம்பீரமான தோற்றம்¸ ஒளிவு மறைவு இல்லாத பேச்சு¸ கல்வியில் மிகுந்த ஆற்றல்¸ தன்னம்பிக்கை¸ உண்மை நிலை¸ குடும்பத்தினர் மீது அதிக பாசம்¸ இதனால் அவ்வப்போது பிரச்சினைகள் கிளம்பி அடக்கி ஆளும் தன்மையுடைய தனுசு ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 2ல் சஞ்சரித்த குருபகவான் வரும் 13-11-2021 முதல் 3ம்மிடம் பெயர்ந்து¸ அங்கிருந்து அவர் 7¸9¸11 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனிபகவான் 2ல் அமர்ந்து 4¸8¸11 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு-கேதுக்கள் 6¸12ல் அமர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர். ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் இராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை வழங்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

உடல் :- உங்களது இந்த ஸ்தானம் சற்று பலம் குறைந்திருக்கிறது என்றே கூறமுடியும். உங்கள் ராசிநாதர் குருபகவான் 3ல் அமர்ந்து மறைவு பெற்றுவிட்டார். ஆகவே வரும் குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல்¸ மனம் பலவிதங்களில் அலைபாயக்கூடிய தன்மை உண்டு. காலையில் ஒருபுத்தி¸ மாலையில் ஒருபுத்தி என்று மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். இதனால் உடம்பில் அசதி¸ அசௌகரியம் உருவாகும். எதையாவது நினைத்துக்கொண்டு அதிலே லயித்து சுய வாழ்க்கையை கோட்டைவிடும் நேரமாகையால் விழிப்புணர்வு தேவை.

தனம்¸ வாக்கு¸ குடும்பம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்துள்ளார். இது ஏழரை சனியின் கடைசி காலம் ஆகும். ஆகவே பயப்பட ஏதும் தேவையில்லை. இவ்வருடம் சனிபகவான் நம்மை ஒரு நிலையான அமைப்பில் உட்கார வைத்து அழகு பார்த்து செல்வார். தனவரவு பரவாயில்லை. அதே சமயம் அடுத்தவர்களுக்காக இருப்பதையும் இழந்துவிட வேண்டாம். பொருளாதார விழிப்புணர்வு தேவை. குடும்பத்தில் சிற்சில சஞ்சலங்கள் உண்டுதான் என்றாலும் பெரிய பாதிப்பு ஏதும் கிடையாது. குடும்பம் மெல்ல மெல்ல நல்ல நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. வாக்குஸ்தானத்தில் சனிபகவான் உள்ளதால் வாய்வார்த்தைகளை கண்டபடி சூரையிட வேண்டாம். 

தைரியம்¸ சகோதரம் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்துள்ளார். இது நல்லதல்ல. இருந்தாலும் குருவின் பார்வை அருமையான இடங்களான 7¸9¸11ல் விழுவது மிகவும் நல்லது. தைரியம் என்பது உங்களிடம் மனதில் மட்டுமே உள்ளது. அதை உடலிலும் காட்ட வேண்டும். அப்போதுதான் எல்லோரும் நம்மை மிரட்சியாக பார்ப்பார்கள். இல்லையெனில் கோழையாக்கி விடுவார்கள். உங்கள் சகோதர ஸ்தானம் நன்றாக உள்ளது. ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டும் காலம் ஆகும். அவர்கள் வழி ஆதரவும்¸ நமக்கு இக்கணம் தேவை. போகப் போக புரிந்து கொள்வீர்கள். வாய் வார்த்தை ஜாலம் வேண்டாம்.

தாய்¸ வீடு¸ மனை¸ வாகனம் :- உங்களின் இந்த ஸ்தானத்தை சனிபகவான் தனது 3ம் பார்வையால் பார்க்கிறார். ஆகவே தாயின் உடல்நிலையில் மிகுந்த எச்சரிக்கை தேவை. அவருக்கு  வாதம்¸ கபம்¸ கலம் போன்ற நோய்த் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தாய்-மக்கள் உறவுமுறை சற்று கவலையளிப்பதாக உள்ளது. கவனம் தேவை. உங்களது வீடு¸ மனை அமைப்பு சற்று உயர உள்ளது. ஏழரை சனி முடிவதற்குள் மனை வாங்கும் அமைப்போ¸ அல்லது கட்டிய வீடு அமையவோ வாய்ப்பு உண்டு. உங்களது வண்டி வாகன யோகம் ஓரளவு நன்றாக உள்ளது. புதிய வாகனங்கள் வாங்க மிகவும் நல்ல நேரம் ஆகும்.

பூர்வ புண்ணியம்¸ புத்திரஸ்தானம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு நிலையான பலன்களை தர முடியாது. இது அவ்வளவு நல்லதல்ல. ஆகவே உங்களுக்கு பூர்வ புண்ணிய கோளாறுகள் ஏற்படும் நேரமாகும். நீங்கள் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று தேவையான பூஜைகளை செய்து கொள்ளவும். அப்போதுதான் புண்ணியம் கூடி பாவம் குறையும். உங்களின் புத்திரபாக்யம் சுமாராக உள்ளது. புத்திரபாக்யம் இல்லாதவர்கள் ஜெனன கால ஜாதகத்தை பார்த்து ஏதாவது தோஷம் இருந்தால் அதை பரிஹாரம் மூலம் தீர்த்துக் கொள்ளவும். திருக்கருகாவூர் சென்று கர்ப்பரட்சாம்பிகையை தரிசிக்கவும். புத்திரபாக்யம் கிட்டும். உங்கள் குழந்தையின் கல்வி¸ உடல்நிலை சுமாராக உள்ளது. கவனம் தேவை.

கடன்கள்¸ உடல் உபாதைகள் :- உங்களின் இந்த ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்துள்ளார். இது மிகவும் நல்ல அமைப்பு ஆகும். உங்களது கடன் விசயங்கள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும். ஒரு சிலருக்கு நெருக்கடியான கடன்கள் நீண்ட கால தவணைகளாக மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. இருந்தாலும் எச்சரிக்கை தேவை. ராகுபகவான் கொடுப்பது போல் கொடுத்து எடுத்தும் கொள்வார். ஜாக்கிரதை தேவை. உங்கள் உடம்பில் விஷ ஜுரம்¸ மறைவிட உறுப்புகள்¸ கண் போன்றவற்றில் நோய்கள் ஏற்படும். தக்க மருத்துவ ஆலோசனைகளை உரிய நேரத்தில் எடுக்கவும். தாமதம் வேண்டாம்.

திருமணம்¸ கணவன்- மனைவி :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவானின் 5ம் பார்வை விழுகின்றது. உங்கள் ராசிக்கு தற்சமயம் குருபலம் இல்லை என்றாலும் பார்வை பலம் கிடைத்துள்ளது. ஜெனன ஜாதகத்தில் லக்ன ரீதியாக திருமண பாக்யம் உள்ளவர்களுக்கு திருமணம் கைகூடும். மற்றவர்களுக்கு கொஞ்சம் தாமதம் ஆகும். திருமணம் ஆன தம்பதியருக்கு நடுவில் சில கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவைகளை தீர்க்க இந்த குருபார்வை உதவும். கணவனோ அல்லது மனைவியோ யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து சென்றுவிட்டால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இல்லை. திருமணகோல சிவசக்தியை வணங்கிவர திருப்பங்கள் பல உண்டாகும்.

ஆயுள்¸ மாங்கல்யம்¸ சத்ரு :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு சனிபகவான் பார்வை உள்ளது. ஆயுள் காரகன் சனிபகவான் ஆயுளுக்கு பங்கம் ஏற்படுத்தமாட்டார். ஆனால் உடல்ரீதியாக பல இன்னல்களை ஏற்படுத்துவார். முக்கியமாக நீர் சம்பந்தமாக ஏதாவது நோய் பிரச்சனைகளையும்¸ புத்தி ரீதியான பிரச்சினைகளையும் தருவார். உங்கள் மாங்கல்ய ஸ்தானத்திற்கு சற்று தோஷம் உள்ளது. ஆகவே வீட்டில் சுமங்கலி பூஜை (அல்லது) கோ பூஜை செய்வது நலம் தரும்.

உங்கள் சத்ரு ஸ்தானம் என்பது நீங்கள் உருவாக்கிய நண்பர்கள் ஏற்படுகிறது. உங்கள் நண்பர்களே உங்கள் முதுகில் குத்துவார்கள் அல்லது எட்டப்பர்களாக மாறுவார்கள். ஜாக்கிரதையாக இருக்கவும்.  

தந்தை¸ கல்வி யோகம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குருபகவான் தனது 7ம் பார்வையை பதிக்கிறார். ஆகவே தந்தையின் ஆயுளுக்கு பங்கம் ஏற்படாது. உடல்நிலையில் சாதாரணமாக வரும் நோய்கள் வந்து செல்லும். உதாரணமாக ஜூரம்¸ சளி¸ இருமல் போன்றவைகள். தக்க மருத்துவ முறைகளை கையாள வேண்டும். தந்தை-மக்கள் உறவுமுறை நன்றாக இருக்கும். உங்களது தந்தை சொத்து சார்ந்த இனங்கள் சரியாக பங்கிடப்படும். உங்களது உயர்கல்வி யோகமானது குருபார்வையால் நன்றாக உள்ளது. கல்வி உண்டு. பணம் இல்லை. பயப்பட வேண்டாம். அரசாங்க உதவிகளோ அல்லது தனிநபர் அறக்கட்டளை உதவிகளோ நிச்சயம் பெறுவீர்கள்.

தொழில் :- உங்களது தொழில் ஸ்தானம் சுமாராகவே உள்ளது. விவசாயம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளைச்சல் சுமாராகவும்¸ மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு மாற்றம் தரும் வேளையும்¸ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இறுக்கம் தளர்தலும்¸ சுயதொழில் புரிவோருக்கு சுணக்கம் நீங்குதலும்¸ கலைத்துறையில் உள்ளவர்களுக்கு கனிவான காலமும்¸ அரசு¸ தனியார் துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும்¸ வேலை இல்லாதவர்களுக்கு வேலையும் கிடைக்கும்.

லாபம் :- உங்களின் இந்த ஸ்தானத்திற்கு குரு¸ சனி ஆக இரண்டு கிரகங்களின் பார்வை கிடைத்துள்ளது. ஆகவே உங்கள் வாழ்க்கையில் லாபம் என்பது வளர்பிறை தேய்பிறை போலத்தான். நமக்கு எக்கச்சக்க கற்பனைகள். கற்பனைகள் எல்லாம் காலத்திற்கு உதவுமா என்பது கிரகங்களின் கோலாட்டத்தில்தான் உள்ளது. நிதானமாக நடைபோட்டால் நிச்சயம் வாழ்க்கையில் லாபம் காணமுடியும். பணம் மட்டும் லாபமல்ல. நம் வாழ்க்கையிலும் நிம்மதி என்னும் லாபம் கிடைக்க வேண்டும். சமயோஜித புத்தியுடன் நடந்து கொள்ளவும். 

வாழ்க்கை செல்லும் பாதை :- உங்களின் இந்த ஸ்தானத்தில் கேதுபகவான் அமர்ந்துள்ளார். உங்கள் ராசிக்கு ராகு மட்டுமே சுபபலன்களை தர உள்ளார். ஏனைய கிரகங்களான குரு¸ சனி¸ கேது ஆகியவர்கள் போதிய பலன்களை தர மாட்டார்கள். இருப்பினும் குருபகவான் தனது 3 பார்வைகளால் அற்புதமான இடங்களை பார்ப்பதால் இன்னல்களை விரட்ட முடியும். ஏழரை சனியில் பாதச்சனி மிக விரைவில் முடிய உள்ளது. கேதுபகவான் தனது ஆன்மீக யோகத்தால் தங்களை காப்பாற்றி வந்து கொண்டிருக்கிறார். ஆகவே எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் வாழ்க்கை படகை ஓட்டுவோம். உங்கள் ராசி அதிபதி குரு அதிதேவதை தட்சிணாமூர்த்தியை வழிபட்டுவர தடங்கல்கள் தீரும்.

பரிஹாரம் :- திட்டை¸ பட்டமங்கலம்¸ ஆலங்குடியில் உள்ள குருபகவானை தரிசிப்பதும்¸ திருநள்ளாறு¸ குச்சனூர்¸ ஏரிக்குப்பத்தில் உள்ள சனிபகவானுக்கு ப்ரீதி செய்வதும்¸ திருப்பாம்புரம்¸ காளகஸ்தி¸ கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள கேதுபகவானுக்கு பூஜை செய்வதும்¸ கால்நடைகளுக்கு தீவனதானம் அளிப்பதும்¸ நூல்களில் தட்சிணாமூர்த்தி கவசம் பாராயணம் செய்வதும்¸ நாங்கள் 28-11-2021ல் ஏற்பாடு செய்துள்ள மஹா நவகிரக பரிஹார ஹோமத்தில் கலந்து கொள்வதும் மிகச்சிறந்த பரிஹாரங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட எண்கள் : 3¸1¸9.அதிர்ஷ்ட ராசிக்கல் : மஞ்சள் நிற கனகபுஷ்பராகம் அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்¸ பொன்நிறம்¸ இளம் சிவப்பு¸ வெளிர்நீலம்¸ வயலட் பரிகார யந்திரங்கள் : தனுசு ராசி யந்திரம்¸ ஸ்ரீகுரு யந்திரம்.

இதில் தெரிவிக்கப்பட்டுள்ள பலன்கள் பொதுவானவை. அவரவர் ஜெனன ஜாதகம்¸ திசாபுத்தி ஆகியவற்றின் படி பலன்கள் கூடவும்¸ குறையவும் வாய்ப்புண்டு. எனவே எதைக் கண்டும் அஞ்ச வேண்டாம். எல்லாம் வல்ல இறைவனின் பாதம் பற்றுவோம். வெற்றி கொள்வோம்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!