சித்ரா பவுர்ணமி அன்னதானத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட பேனரில் அண்ணாமலையார் படம் இல்லாததற்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பாக அன்னதானம் வழங்குபவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது,
உணவு பாதுகாப்பு துறையால் அங்கிகரிக்கப்பட்ட வணிகர்களிடம் மட்டுமே சமைப்பதற்;கான மூலப் பொருட்களை பெற்று இருக்க வேண்டும். பொறிப்பதற்கு பயன்படுத்தும் எண்ணெய் மூன்று முறைக்கு மேல் பயன்படுத்த கூடாது. அன்னதானம் வழங்குவோர்கள் கை கவசம், முக கவசம் மற்றும் தலைகவசம் அனிந்து உணவு பரிமாற வேண்டும்.
சமைத்த உணவினை மூன்று மணி நேர கால அவகாசத்திற்குள் விநியோகிக்க வேண்டும் உணவு பொருட்களின் கழிவுகளை குப்பை தொட்டிகள் அல்லது பைகளை கொண்டு அப்புறபடுத்துவது அன்னதானம் வழங்குபவர்களின் பொறுப்பு ஆகும்.
அனுமதி பெறாமலோ அல்லது அனுமதிக்கப்படாத இடத்திலோ அன்னதானம் வழங்க கூடாது. அன்னதானம் வழங்குவது குறித்து பக்தர்களுக்கு ஒளிபரப்பு செய்து தொந்தரவு செய்யக்கூடாது, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையை ஆக்கிரமித்து அன்னதானம் வழங்குவதை தவிர்க்க வேண்டும். தரமற்ற வகையில் அன்னதான உணவு தயாரித்து வழங்கினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிறகு அவர் அன்னதானம் வழங்குபவர்களுக்கு அனுமதி பதாகையினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சதீஷ், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அன்னதானம் வழங்க அனுமதி பதாகையினை பெற்ற இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சரவணன், பேனரில் அண்ணாமலையார்-உண்ணாமலையம்மன் படம் இடம் பெறாதது வருத்தம் அளிக்கிறது, சிறிய பேனருக்கு 400 ரூபாயும், பெரிய பேனருக்கு 600 ரூபாயும் அதிகாரிகளால் வசூலிக்கப்படுகிறது. அண்ணாமலையார்-உண்ணாமலையார் படமின்றி, ஸ்டாலின், உதயநிதி படம் பொறித்த பேனருக்கு இவ்வளவு ரூபாயை நாங்கள் ஏன் தர வேண்டும்? என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.