Homeஆன்மீகம்2024 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும்?

2024 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும்?

2024 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும்?

பொதுப்பலன்கள்

01-01-2024 மார்கழி 16ஆம் தேதி திங்கட்கிழமை சிம்ம ராசி, மகம் நட்சத்திரம், கன்யா லக்னத்தில் புத்தாண்டு பிறக்கிறது. 2024 ஆம் ஆண்டு ராகு-கேது பெயர்ச்சி கிடையாது. மே மாதம் குரு பெயர்ச்சி மட்டும் உண்டு. ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. உலகத்தில் நிலநடுக்கம், புயல் உண்டாகும். மத சீர்திருத்தவாதிகள், கலை, சினிமா துறை பிரபலமான கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோருக்கு உடல் பாதிப்பு ஏற்படும். விஞ்ஞானிகள் பிரபலம் அடைவார்கள். புதிய டெக்னாலஜி, டெவலப்மெண்ட் உண்டு.

இனி ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள்

2024 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும்?

மேஷம்

வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். ஆரோக்கியம் மேம்படும். மே 1 குரு பெயர்ச்சிக்கு பிறகு திருமணத்திற்கு தகுதியான ஆண், பெண்ணுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். நிதிநிலை உயரும். மருத்துவம், விஞ்ஞானம், விளையாட்டு, ஆசிரியர் தேர்வு ஆகியவற்றை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும். வெளிநாடு சென்று பயிலும் பாக்கியமும், வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

ஜூன் 29 முதல் நவம்பர் 15 வரை சனி வக்ரம் அடைகிறது. புதிய முதலீடுகள் புதிய தொழில் எதையும் தொடங்க வேண்டாம். நவம்பர் வரை ஏற்றத் தாழ்வு இருக்கும். இந்த சமயத்தில் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் முன் ஜாமின் போடுவது, கடன் கொடுப்பது இருக்கக்கூடாது. மகளிருக்கு பொன், பொருள் சேரும். பணம் புழக்கம் அதிகரிக்கும். அரசு பணியில் இருக்கும் ராசிக்காரர்களுக்கு உயர் பதவி உண்டு.

பல ஆண்டுகளாக குழந்தை பிறக்காத தம்பதிகளுக்கு இந்த ஆண்டு குழந்தை நிச்சயம் உண்டு. விவசாயிகளுக்கு நெல் மற்றும் தானியங்கள் உற்பத்தி செழிக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அரசால் பரிசும், பாராட்டும் கிடைக்கும். திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கி விட்டு வரவும். செவ்வாய் தோறும் ஏதாவது ஒரு முருகர் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வரவும் நன்மை கிட்டும்.

2024 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும்?

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் அதிஷ்டம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கையில் திருப்தி உண்டாகும். குரு பெயர்ச்சி நன்மையை தரும். ஜூன் ஒன்றாம் தேதி சனி பத்தாம் வீட்டிற்கு வருகிறார். நவம்பர் 15 வரை வக்கிர நிலையில் உள்ளார். இந்த காலகட்டத்தில் தொழிலதிபர்கள் புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். நண்பருடன் கூட்டு வியாபாரம் வேண்டாம். தொழில் மெதுவாக செல்லும். ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலனை தரும். ஜென்ம குருவின் ஏழாம் பார்வை உங்களுக்கு கை கொடுக்கும்.

விவசாயிகள் நல்ல பலனை அடைவார்கள். அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் உயரும். ஆசிரியர் தேர்வு எழுதுபவர்கள் வெற்றி பெறுவார்கள். திடீர் லாட்டரி யோகம் உண்டு. பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். குரு ஏழாம் பார்வை பார்ப்பதால் மாணவ-மாணவியர்களுக்கு தேர்வில் வெற்றி கிடைக்கும்.

தாய், தந்தை உடல் நிலையில் அக்கறை தேவை. ஜென்ம குருவாக வருவதால் உங்கள் உடல் நலத்தை கவனமுடன் பார்த்துக் கொள்ளவும். பொதுவாக இந்த வருடம் நற்பலன்களாகவே அமையும். ரிஷப ராசிக்காரர்கள் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்யவும். வெள்ளி தோறும் ஏதாவது ஒரு பெருமாள் கோயிலுக்கு சென்று வலம் வரவும். திருநள்ளாறு சென்றாலும் நன்மை கிட்டும்.

2024 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும்?

மிதுனம்

வீடு, மனை, தொழில், பொருளாதாரம், உறவு முறை, உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்க வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் உண்டு. மே மாதம் குரு பன்னிரண்டாம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜூன் முதல் நவம்பர் வரை புதிய முயற்சி வேண்டாம். தோல்வி ஏற்படும். நன்மையும் தீமையும் மாறி மாறி வரும்.

உயர்கல்வி முடித்த மாணவ மாணவிகளுக்கு உத்தியோகம் கிடைக்கும். கப்பல் துறை, ஏற்றுமதி இறக்குமதி, சட்டம் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு குரு நல்ல பலனை தருவார். நல்ல பணி அமையும். வெளிநாடு யோகம் உண்டு. மேல் படிப்பு படிக்கும் வாய்ப்பு உண்டு.

இந்த ராசிக்காரர்களுக்கு வாத நோய் சம்பந்தப்பட்ட நோய் வரும். எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும். தியானம், யோகா செய்ய வேண்டும். பெண்களுக்கு பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள் சேரும். வாகன யோகமும் கிட்டும். திருமணம் கைகூடும். நவகிரகத்தில் இருக்கும் புதன் பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி துளசி மாலை சாற்றி பச்சை ஆடை அணிவித்து புதன் பகவானை வணங்குங்கள். நல்ல பலன்கள் ஏற்படும். திருவெண்காடு சென்று புதனை தரிசனம் செய்யுங்கள். பச்சைப் பயிர் சுண்டல் தானம் செய்தால் நல்லது பெருகும்.

2024 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும்?

கடகம்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நல்ல பலன்கள் ஏற்படும். குரு மே 1ஆம் தேதி 11ஆம் இடத்தை பார்க்கிறார். இது நல்ல வளர்ச்சியை உருவாக்கும். புதிய தொழில் தொடங்கலாம். வெளியூர், வெளிநாடு பயணம் மேற்கொண்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. எட்டாம் வீட்டை சனி பார்ப்பதால் தாய்-தந்தையர், நண்பர்கள், மனைவியிடம் வாக்கு வாதம் வேண்டாம். நவம்பர் 15 வரை புதிய முதலீடு வேண்டாம்.

சனி வக்ர நிலை அடைகிறது. வீண் விரயம் ஏற்படாமல் இருக்க வீட்டு மனையில் முதலீடு செய்யலாம். அஷ்டம சனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் முயற்சி எடுத்து படிக்கவும். அப்படி படித்தால் தேர்ச்சி அடைவார்கள். கப்பல் துறையில் பணிபுரிபவர்களுக்கு உயர் பதவி உண்டு. அதே போல் அந்த துறையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் பலன் உண்டு. இவர்கள் கன்னிகா பரமேஸ்வரியை வணங்க வேண்டும் சூரிய வழிபாடு செய்து அன்னை பகவதியை வணங்கவும்.

அரசியல்வாதிகள், விவசாயிகளுக்கு மத்திம பலனே கிடைக்கும். இந்த ராசியைச் சேர்ந்த இல்லத்தரசிகள், கணவன்மார்கள் அனைவரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி விளக்கேற்றி ராகு காலத்தில் வழிபடவும். காளியை வணங்கினால் கஷ்டங்கள் விலகும்.

2024 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும்?

சிம்மம்

இந்த ஆண்டு மின்சாரம் சம்பந்தப்பட்ட தொழில்களை செய்பவர்களுக்கும், அரிசி ஆலை, பட்டாடை உற்பத்தியாளர்களுக்கும், நெருப்பு மூலம் இரும்பு கம்பிகள் தயாரிப்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். உயர் பதவிகள் உண்டு. குரூப் 2 தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு மின்சாரத்துறை போன்ற அரசாங்க வேலை கிடைக்கும். குரு பத்தில் வருவதால் வாழ்க்கை துணை, உறவினர்கள், நண்பர்களிடையே பிரச்சினை ஏற்படலாம். நீதிமன்றங்களை நாடும் நிலை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை.

ஜூன் 29 முதல் நவம்பர் 15 வரை சனி வக்ர நிலைக்கு செல்கிறது. இந்த ஆண்டு ராகு இரண்டிலும், கேது எட்டிலும் சென்று கொண்டிருக்கிறது. நிதி சிக்கல், பணமுடை ஏற்படும். மாணவ-மாணவிகள் முயற்சி எடுத்து படிக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஓரளவு நற்பலன்கள் உண்டு. வானிலை ஆராய்ச்சியாளர்கள் பாராட்டு பெறுபவர்கள். இந்த படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பதவிகள் கிடைக்கும். வெளிநாடு யோகமும் உண்டு.

பெண்கள் மின்சாதனம், கேஸ் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைவரும் சார்ஜ் போட்டுக் கொண்டே போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். சுந்தரராஜ பெருமாளை வணங்க வேண்டும். அழகர் மலை சென்று வந்தால் கடன் பிரச்சனையும், பிரச்சனைகளும் தீரும். தினசரி சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். கும்பகோணத்தில் உள்ள சூரியனாரையும், மங்களம் மங்களாம்பிகையும் வணங்கினால் பலன் உண்டு. சூரிய லிங்கத்துக்கு ஞாயிறு அன்று 21 தீபம் ஏற்றி செவ்வாழை சாற்றுவதும் நன்மங்களை பெருக்கும்.

2024 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும்?

கன்னி

இந்த ஆண்டு சராசரியான பலனை எதிர்பார்க்கலாம். நம்பிக்கை, புத்துணர்ச்சி உண்டாகும். மே 1 முதல் குரு பகவான் 9 ஆம் வீடான் சந்திரனில் நுழைகிறார் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். தொழில் ஸ்தானம் சிறப்பாக இருக்கும். விவசாயத்தை பாடமாக எடுத்து படிப்பவர்கள் மேன்மை அடைவர். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிட்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

ஜூன் 2 முதல் நவம்பர் 15 வரை சனி வக்கிர நிலையில் இருப்பதால் இந்த கால கட்டத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். புதிய வீடு அமையும், வேலை வாய்ப்பு அமையும். சிறப்பு பொருளாதாரம் நிறைந்த ஆண்டாக இது இருக்கும்.

ஏப்ரல் 1ந் தேதி முதல் குரு பார்வை கிடைப்பதால் அருமையான பலன்கள் ஏற்படும். உங்கள் வளர்ச்சியை தடுக்க முடியாது. தீரா நோய் கடன் தீரும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவியர்கள் நல்ல தேர்ச்சியை அடைவார்கள் மதிப்பெண் கூடும். ராமேஸ்வரம் சென்று பர்வதவர்ததினி அம்மனை வணங்கவும். புதன் பகவானுக்கு அர்ச்சனை செய்யவும். ஹயக்ரீவர் வழிபாடு நல்ல பலன் தரும்.

2024 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும்?

துலாம்

பொருளாதார ரீதியாக சாதகம் உண்டாகும். வீட்டில் சுப நிகழ்வுகள், புதிய வீடு கட்டுதல், நல்ல திருமண அமைப்பு, குழந்தை பேறு, மங்கள நிகழ்வுகள் நடக்கும். புதிய தொழில் கை கொடுக்கும். நல்ல லாபம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ராகு-கேது 6 மற்றும் 12 ல் உள்ளதால் கல்வி பயிலும் மாணவ- மாணவிகள், தாய் தந்தை, ஆசிரியர் பேச்சை கேட்டு நடக்க வேண்டும்.

பல ஆண்டாக பட்ட கஷ்டங்கள் விலகும் ஆண்டாக இது அமையும். விவசாயிகள், பெண்களுக்கு உயர்வு உண்டு. மாசு நீக்கும் தொழில் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன் உண்டு. சனி வக்ர காலமான ஜூன் 1 முதல் நவம்பர் 15 வரை சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தை மாதம் குலதெய்வத்திற்கு பொங்கல் வைக்க வேண்டும் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி மூன்று முறை வலம் வந்து நமஸ்காரம் செய்யவும். முன்னோர் வழிபாடு அவசியம் தேவை. அமாவாசை தினத்தில் கெடுமுடி சென்று மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்யவும். கலை துறையில் இருப்பவர்கள் கலைவாணியை வணங்கி வர வேண்டும்.

2024 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும்?

விருச்சிகம்

இந்த ஆண்டு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். எந்த தொழிலாக இருந்தாலும் சவாலாக எடுத்து செய்ய வேண்டும். அதன் மூலம் நல்ல பலன் கிட்டும். ஐந்தில் ராகு இருப்பதால் பணவரவு பொருள் வரவு அதிகரிக்கும். நீர்பாசனம் சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு பணி உயர்வு, பாராட்டு கிட்டும். மூதாதையர் சொத்து ஆதாயம் தரும். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும்.

அரசாங்க உதவிகள் பெறும் முயற்சிக்குப் பிறகு கிடைக்கும். எடுக்கும் காரியங்கள் நல்ல நிலையில் முடியும். புதிய அந்நிய நண்பர்கள் அறிமுகம் ஏற்படும். அதனால் நன்மையும், பயணமும் ஏற்படும். பழைய பாக்கி வசூல் ஆகும். வியாபாரப் போட்டி குறையும். பெண்களுக்கு பொன், பொருள் சேரும். சுப காரியம் வீட்டில் நடைபெறும்.

மாணவ-மாணவியர்கள் தேர்வில் வெற்றி அடைவார்கள். அரசியலில் துணிவுடன் ஈடுபடலாம். பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் உண்டு. குத்தகை நிலம் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். இந்த ராசியினர் அம்மன் கோயிலுக்கு செவ்வாய் தோறும் விளக்கேற்றி வலம் வந்து வழிபடவும். அண்ணாமலையார் கோயிலில் உள்ள உண்ணாமலை அம்மனை அர்ச்சனை செய்து வணங்கினால் வேண்டிய வரம் கிட்டும்.

2024 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும்?

தனுசு

இந்த ஆண்டு மிக நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். குரு ஐந்தில் இருந்து அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். நல்ல வேலை வாய்ப்பு, தொழில் அமையும். அரசு வேலை கிட்டும். பதவி உயர்வு உண்டு. தொழில் அபிவிருத்தி அடைந்து முடக்கம் நீக்கி பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு கிரகப்பிரவேசம் செய்வீர்கள். பொன், பொருள், வாகனம் வாங்குவீர்கள்.

ஆண், பெண் இருபாலருக்கும் திருமணம் நடக்கும். வெளிநாடு பயணம் யோகம் தரும். பெண்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படும். தங்கள் பெயரில் வீடுகளை வாங்குவார்கள். சேமிப்பு உயரும். ஏழரை சனியிலிருந்து விடுதலை நிம்மதி கிடைப்பதால் பெருமூச்சு விடலாம். ஜூன் 1 முதல் நவம்பர் 15 வரை சற்று எச்சரிகையாக இருக்க வேண்டும். புதிய முடிவு அல்லது முக்கிய முடிவு எடுக்க வேண்டாம்.

தொழிலில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுமக்களிடையே நல்ல பெயர் எடுப்பார்கள். விவசாயிகளுக்கு விவசாயம் கை கொடுத்து நல்ல மகசூலை தரும். குறிப்பாக கரும்பு, நெல் கை கொடுக்கும். வியாழன் தோறும் குரு பகவானை வணங்குங்கள். ஞாயிறு அன்று சுசீந்தரம் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விட்டு வரவும். சிவன் கோயில் உள்ள குரு பகவானுக்கு கொண்டை கடலை மாலை சாற்றி 21 நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

2024 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும்?

மகரம்

மகர ராசியினர் பாத சனியாக இருந்தாலும் பயப்பட வேண்டாம். குரு, ராகு, கேது உங்களுக்கு சாதகமான பலன்களை தருவார்கள். சுய தொழில் வளர்ச்சிக்கு அதிர்ஷ்டம் உண்டு. வெளியூர் தொழில் நல்ல லாபம் கிடைக்கும். பண முடை நீங்கும். குரு மே 1ஆம் தேதி பெயர்ச்சி ஆகி மிக, மிக நல்ல பலனை தர இருக்கிறார். முயற்சி ஸ்தானத்தில் ராகு இருப்பதால் எடுத்த காரியம் கைகூடும். அபரிதமான பலனை எதிர்பார்க்கலாம்.

சனி வக்கிர நிலையில் சென்றாலும் நல்லதே நடக்கும். குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குரு பார்வையால் புத்திர பாக்கியம் கிடைக்கும். உடல்நிலை, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். பாதசனி என்பதால் வண்டியில் செல்லும் போது வேகத்தை குறைக்கவும். மகர ராசி சேர்ந்த ஆண், பெண் இருபாலருக்கும் நல்ல வேலை கிடைக்கும். மருத்துவத் துறையில் நல்ல முன்னேற்றம் வேலை வாய்ப்பு கிட்டும்.

சினிமா கலைத்துறை வேதியியல் துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் சலுகைகள் கிடைக்கும். விருதுகளையும் பெறுவார்கள். ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தேர்ச்சி கிட்டி அரசு வேலை கிடைக்கும். விவசாயிகள் புதிதாக நிலம் வாங்குவார்கள். பத்திரிகை துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. ஜோதிடர்களுக்கு வாக்கு பலன் கிட்டும். அனுமனுக்கு வெற்றி வெற்றிலை மாலை சாற்றி வழிபடவும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றவும். ஸ்ரீரங்கம் சென்று பெருமாளை வழிபடவும்.

2024 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும்?

கும்பம்

கும்ப ராசியினர் இந்த வருடம் பொருளாதார ரீதியாக சிரமங்களை சந்திக்க வேண்டியது வரும். ஜென்ம சனி உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். நுரையீரல் சம்பந்தப்பட்ட தொற்று நோய் ஏற்படும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெரும்பாலும் செய்யும் தொழிலிலேயே தொடர வேண்டும். தொழில் மாற்றம் வேண்டாம். ஏழரை சனியின் நடுமையத்தில் இருப்பதால் எச்சரிக்கை தேவை.

குரு பெயர்ச்சியால் நல்ல பலனை அடையலாம். மே 1 குரு பெயர்ச்சிக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கவும். ஜூன் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை சனி வக்ரம் அடையும் போது கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. யாருக்கும் முன்ஜாமீன் போட வேண்டாம். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனைவி, தந்தை, தாய் உடல் நிலையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். எதிலும் யோசித்து செயல்பட வேண்டும்.

பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமாக முடியும். விவசாயிகளுக்கு 25 சதவீத பலன்களே ஏற்படும். விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைப்பார்கள். மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைவார்கள். அரசியல், சினிமாத்துறை, கலைத்துறை சாதகமாக இல்லை. திருப்பதி சென்று பெருமாளையும், தாயாரையும் வணங்கி விட்டு வரவும். சுவாமிமலை முருகனுக்கு அர்ச்சனை செய்யவும். திருநள்ளாறு அவசியம் சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.

2024 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும்? மீனம்

மே மாதம் 1ம் தேதி குரு மூன்றாம் வீட்டுக்கு வருவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். அதற்கேற்ற செலவு வரும். வீடு, மனை, நிலம் நல்ல விலைக்கு விற்பனைக்கு வரும். ராகு- கேது நல்ல நிலைமையில் இல்லாததால் உறவுகளில் பிரச்சனை ஏற்படும். உடல் நலத்திலும் எச்சரிக்கை தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் போது வேகத்தை குறைக்கவும். தொழிலில் எச்சரிக்கையாக இருக்கவும். வேலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

குரு சாதகமாக இருப்பதால் பயம் தேவையில்லை. ஜூன் முதல் நவம்பர் வரை சனி வக்ர நிலையில் இருப்பதால் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முன்கோபம் இருக்கக் கூடாது. கணவன்- மனைவி அன்பு நீடிக்கும். பெண்கள் மகிழ்ச்சியில் திளைப்பார்கள். சகோதரர் உதவி கிட்டும். தாய் வீட்டில் சொத்து வந்து சேரும். திருமணம், வெளிநாடு, வெளி மாநிலம் அனுப்புவது போன்ற முக்கிய முடிவுகளை வீட்டில் உள்ள முதியோர்களிடம் ஆலோசனை கேட்டு முடிவு செய்ய வேண்டும். அரசியலில் ஆதாயம் கிடையாது. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ- மாணவிகள் குருவின் ஆசிர்வாதத்தால் நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.

குரு பார்வையால் திடீர் அதிர்ஷடம் ஏற்படும். சிறியதாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் நல்ல விளைச்சலைப் பெற்று லாபம் பார்ப்பார்கள். சிவன் கோயில் உள்ள நவகிரக குருவிற்கு 11 வாரம் கொண்டைக் கடலை மாலை சாற்றி மஞ்சள் வஸ்திரம் சாற்றி தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ராகு- கேதுக்காக அஷ்டமி அன்று தேங்காய் அல்லது பூசணிக்காயில் இலுப்பை எண்ணெய் ஊற்றி சிவப்பு திரியில் தீபம் ஏற்ற வேண்டும்.

கணித்தவர்:-

2024 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும்?

ஜோதிட கலாநிதி
எம். பொன்னி முத்துக்குமார்
தாமரை நகர், திருவண்ணாமலை.
செல்-9629027563, 9080157932

குறிப்பு:-

இந்த ராசிப்பலன்கள் யாவும் பொதுப்பலன்கள் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்து இருக்கும் இடங்களை பொறுத்து பலன்கள் மாறும் என்பதை வாசகர்கள் தெரிந்து கொள்ளவும்.


Link:-http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!