திருவண்ணாமலை மாவட்டத்தின் “நம்ம திருவண்ணாமலை” என்ற கைபேசி செயலி இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம்¸ ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (01.01.2021) மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக வடிவமைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் “நம்ம திருவண்ணாமலை” (“Namma Tiruvannamalai”) கைபேசி செயலியினை (Mobile Application) இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்¸ மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி¸ கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம்¸ ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் (பொ) ஜெயராமன்¸ செயலியினை வடிவமைத்துள்ள மனு மீடியா வொர்க்ஸ் தலைமைச் செயல் அலுவலர் சிவராஜூ மற்றும் அரசு அலுவலர்கள்¸ உள்ளாட்சிப் பிரதிநிதிகள்¸ கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக “நம்ம திருவண்ணாமலை” என்ற பிரத்யேக கைபேசி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயலி மூலம் பல்வேறு அரசு திட்டங்கள்¸ வளர்ச்சிப் பணிகள் மற்றும் புதிய முயற்சிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்களிடம் இருவழிப் தொடர்புகளை செயல்படுத்தும் நோக்கத்துடனும்¸ தகவல்களை திறம்பட பரப்பவும்¸ பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளவும்¸ அவர்களின் பங்கேற்புடன்¸ ஈடுபடுத்தி செயல்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“நம்ம திருவண்ணாமலை” செயலியின் முக்கிய நோக்கங்கள் மற்றும் அம்சங்கள் வருமாறு¸
திருவண்ணாமலை மாவட்ட மக்களின் ஈடுபாட்டை மேம்படுத்தவும்¸ பல்வேறு அரசு திட்டங்களின் செயல்பாடு¸ குறை தீர்வு¸ துறை ரீதியான தகவல்கள்¸ மாவட்ட அலுவலர்களின் தொடர்பு விவரங்கள்¸ மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகள் பற்றிய தகவல்கள் செயலியில் இடம்பெற்றுள்ளது.
மேலும்¸ சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்கள்¸ பிளாஸ்டிக் இல்லா திருவண்ணாமலை¸ ஸ்வட்ச பாரத் தூய்மை பாரதம்¸ ஜல் சக்தி அபியான் நீர் மேலாண்மை¸ உட்பட பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களில் “நம்ம திருவண்ணாமலை” செயலி மூலம் பொதுமக்களையும் ஈடுபடுத்துதல். “நம்ம திருவண்ணாமலை” செயலி திருவண்ணாமலை மாவட்ட மக்களின் மைய புள்ளியாகவும்¸ மாவட்ட மக்களை மேம்படுத்துதற்கும் செயல்படும். இதற்கு பொதுமக்கள் “நம்ம திருவண்ணாமலை” செயலியில் அடிப்படை KYC பயன்படுத்தி தங்களது கைபேசி எண் அளித்து¸ OTP மூலம் சரிபார்த்து¸ விவரங்களை பதிவு செய்யலாம்.
இச்செயலியில் கைபேசி மூலம் பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் குறைகளை சமர்ப்பிக்கும் வகையில் “எனது புகார்கள்” என்ற பிரத்தியேக பிரிவின் கீழ் அளிக்கும் புகார்களின் நிலை குறித்த அறிவிப்பை பெறுவதற்கான திறன் உள்ளிட்ட அனைத்து வகையான சேவைகளையும் பெற முடியும். “நம்ம திருவண்ணாமலை” செயலியில் மாவட்டம் குறித்த விவரங்கள்¸ வரை படங்கள்¸ மாவட்ட அலுவலர்களின் முகவரி மற்றும் தொடர்பு எண்கள்¸ அரசு திட்டங்கள் குறித்த விவரங்கள்¸ மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்ற¸ சட்டமன்ற உறுப்பினர்கள் விவரங்கள் உட்பட அனைத்து அத்தியாவசிய தகவல்களும் இடம் பெற்றுள்ளது.
மேலும்¸ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்படும் தினசரி செய்தி வெளியீடுகள்¸ துறை ரீதியான அறிவிப்புகள்¸ மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள்¸ திட்டங்கள் மற்றும் முன் முயற்சிகள் குறித்த புகைப்படங்கள் மற்றும வீடியோ தொகுப்புகள் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் “நம்ம திருவண்ணாமலை” செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் “நம்ம திருவண்ணாமலை” செயலியினை கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது www.tiruvannamalaimaavattam.com என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.